Tuesday, November 28, 2006

ஆசிவகம் 3



ஆசிவகம் 3


தொல்பொருள் துறையினரின் அலட்சியப் போக்குக் குறித்து ஆசிவகம் 2 ல் குறித்திருந்தேன். மேலும், சமண மத ஆதாரங்கள் இந்து மத ஆதாரமாக மாறலாம் என்றும் எழுதியிருந்தேன். சில அன்பர்கள் ஆதாரம் இல்லாமல் எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்கள். ஆதாரம்தான் என்ன? ஒரு பேராசிரியர், க.நெடுஞ்செழியன்என்பார், சமணத் துறவியான இளங்கோவடிகள் செய்த நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் "ஆசிவகம்" சார்ந்தது என்று எழுதியிருக்கிறார். அத்தோடு இல்லாமல் ஆசிவகம் தான் பின்னாளில் "வைணவம்" ஆனது என்று சொல்கிறார். சரி. தெரிந்துக் கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

சமீபத்தில் என் நண்பர் திருப்பதிசாமி தொலைபேசியில் அழைத்து சிலப்பதிகாரம், சிற்றண்ணவாயில் ஆகியவை ஆசிவகம் சார்ந்தது என்று பேரா.க.நெடுஞ்செழியன் என்பார் புத்தகம் எழுதியிருக்கிறார் என்று சொன்னார். சொன்னதோடு நில்லாமல் நேரிலே வந்து பேரா.க.நெடுஞ்செழியனின் அந்த இரண்டு புத்தகங்களையும் பரிசாக கொடுத்தார். படித்துவிட்டு இதற்கு தக்க மறுப்பு எழுதுமாறும் கேட்டுக் கொண்டார். :-)

அந்த புத்தகங்கள் இதுதான்:

1. சங்கக்காலத் தமிழர் சமயம்.
2. சித்தண்ண வாயல்

கிடைக்கும் இடம்:

பாலம்இ/7,
பாரத் அடுக்ககம்,
ஆர்.வி. நகர்,அண்ணா நகர் கிழக்கு,
சென்னை - 102

பேராசிரியர் நிறைய சிரமப்பட்டிருப்பது தெரிகிறது. அவ்வளவு சிரமப்பட்டு என்ன பயன்?. சான்றுகள் இல்லாமல் அவர் தன் கற்பனை குதிரையை (எருது? ;-) புத்தகம் முழுக்கஅலையவிட்டுருக்கிறார். சான்றுகளாக அவர் கூறும் இடங்கள் எல்லாம் சமண (ஜைன)நூல்களிலிருந்து தான் சான்றாக தருகிறார். யான் ஈங்கு எடுத்துக்காட்டுதும்!

"திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்"

என்பது சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் முதல் பாடலாக வரும் பாட்டு. இந்தப் பாட்டில்கூறப்பட்டிருக்கும் தெய்வம்தான் என்னை? இதற்கு எந்த உரையாசிரியரிடமும் போக வேண்டாம். இந்தப் பாட்டு "அருக பகவானை"ப் போற்றுகிறது. இதில் ஐயத்திற்கு கிச்சித்தும் இடனில்லை. இந்தப்பாட்டு அருகனைத்தான் குறிக்கிறது என்பதற்கு, இந்தப் பாட்டில் Key word"ஆக இருக்கும் "திரு முக்குடை", " பிண்டி", "அறிவனை", "கந்தன் பள்ளி" என்ற சொற்களுக்கு விளக்கம் பெற புகுந்தாலே உண்மைப் புலப்படும். ஆனால் ஏனோ நம்ம பேராசிரியர் மற்ற சொற்களை விட்டுவிட்டு "அறிவன்" என்ற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி, சுற்றி வந்து பொருள் கூற சிரமப்பட்டிருக்கிறார். "அறிவன்" என்ற சொல் "மற்கலி கோசரை" குறிக்கும் என்கிறார் நம் பேரா. க.நெ. ஆனால் அதற்கு அவர் எந்த சான்றுகளையும் கூறவில்லை.

மாறாக, மேலே சொன்ன முக்கிய வார்த்தைகள் சமண இலக்கியங்களில் விரவி வருவதைக் காணலாம். மேலும், அறிவன் என்ற சொல் அருகர், புத்தரரைக் குறிக்கும் தனிச் சொல். பின்னாளில் எல்லா மதங்களும் அச்சொல்லை உள்வாங்கிக் கொண்டன. தமிழில் உள்ள எல்லா நிகண்டுகளும் "அறிவன்" என்ற சொல்லை அருகற்கும், புத்தருக்கும் வழங்கி வருவதைக் காணலாம். உண்மை இவ்வாறு இருக்க நம்ம பேராசிரியரோ அச்சொல் 'மற்கலி கோசரை" குறிக்கிறது என்கிறார். எங்கே போய் ... கொள்ள? இது முழுப் பூசணிக்காயைசோற்றில் மறைப்பது போலாகும். :-)

அதுபோல் இன்னொன்றையும் ஈண்டு சொல்லலாம். "திருமூக்குடை" - மூன்று குடைகள். அருக பெருமானுக்கே உரித்தான ஒன்று. அருகருக்கு சிறப்பாக கூறப்படும் அதிசயங்களில் ஒன்று! அருகன் மூன்று உலகத்திற்கும் அதிபதியாகையால் குறியீடாகக் குறிக்க மூக்குடைகள் அமைப்பது ஜைன சம்பிரதாயம். சிற்ப சாத்திரத்தில் அருகனுக்கே இக்குறியீடு உண்டு. வேறு எந்த கடவுளுக்கும் இந்த குறியீடு கிடையாது. அப்படியிருக்குமானால் அவற்றை சுட்டினால்அமைய பெறுவேன். மற்கலி கோசருக்கு அவ்வாறு குறியீடு இருந்தால் பேரா.க. நெடுஞ்செழியன் ஐயா அவர்கள் சுட்டவேண்டுகிறேன்! "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்" ;-)

சரி, சமண தமிழ் இலக்கியங்களில் பிண்டி, முக்குடைப் பற்றியப் பாடல்கள் பரவலாக வழங்கி வருவதையும் பார்க்கலாம்.

1." மின்னார் முத்து மணிமாலை
மிளிருங் குடைமூன் றுடையானை .... "
- தோத்திரத் திரட்டு

2. "பெருநாள் மதிபோல் நிலவுமுக் குடையாய்
பிழைபடா நெறியாய் பிறவிவேர் குறுவாய்
முருகுலா மலர்மேல் வருதிக பரனே!"
- மந்திரப் பத்து

3. " முத்தொளி முக்குடையாய் மூவுலகு ஆளுடையாய்
உத்தமனே அருகா உன்பதமே சரணம் ..... !"
- சரணப் பத்து

4. " திகழ்பூப் பிண்டி நிழலுடையாய்
திக்கே யுடையாய் முக்குடையாய் ..........!"
- அருகர் பத்து

5. " பேதையர் காதம் பிணைக்கறுக்கும் பூம்பிண்டி
நாதனை முக்குடைக்கீழ் நாயகனைக்-காதிவினை .........!"
- திரு இரட்டை மணி மாலை

6. " உலர்தழைப்ப ஒளிதிகழ்மூ வாமதிமுக் குடையானை அடலார் ஆழ் வலர்தழைக் கும்வண் மயிலை மன்னவனை, மணியை, முன்னாது ......!"
- திருமயிலாப்பூர்ப் பதிகம்

7. " கொலையிலா நெறிவேந் தனே ஒளி
குலவு முக்குடை யாளனே!
நிலையனே திருமயிலை மேவிய
நேமி நாத சுவாமியே!"
- திருமயிலை நேமிநாதசுவாமி பதிகம்

8. " முத்தணிந்த முக்குடைக்கீழ் மூர்த்தி திருவடியைப்
பத்திமையால் நாளும் பணிகின்றார் யாரே
பத்திமையால் நாளும் பணிவார் பகட்டெருத்தின்
நித்தில வெண்குடைக்கீழ் நீங்காதார் அன்றே!"
- சீவக சிந்தாமணி (2740)


சிற்பச் சான்று இங்கே பார்க்கவும்.

http://blog.360.yahoo.com/blog-IHs9FFYzeqhS6IL.5yu4wTp7Ww--?cq=1&p=16

http://blog.360.yahoo.com/blog-IHs9FFYzeqhS6IL.5yu4wTp7Ww--?cq=1&p=14

தொடரும்...

Friday, November 10, 2006

சமணம் எதுவோ?

சமணம் எதுவோ?


"அந்நெறி எதுவோ செந்தண் சைனம்;
சைனம் ஒருமதச் சார்பின தன்று;
சைனம் எதுவெனச் சாற்றுவன் இங்கே;
ஐம்புலன் வெல்லும் செம்மை சைனம்;
ஒழுக்கம் காக்கும் விழுப்பம் சைனம்;
கொலைகள் ஒழித்து நிலைபெறல் சைனம்;
கள்பொய் காமம் தள்ளல் சைனம்;
ஊனுண் ணாத மேனிலை சைனம்;
வெறியா வேசம் முறியிடம் சைனம்;
சாந்த அமுதம் மாந்தல் சைனம்;
நன்லெணம், நல்வழி, நற்பணி சைனம்;
பிறர்க்கென வாழும் திறத்துறை சைனம்;
தேவை அளவை மேவல் சைனம்;
அகிம்சா தர்மம் அனைத்தும் சைனம்;
இந்தச் சைனம் எந்த மதமோ?
மக்கட் குரிய தக்க பொதுமை!"


மேலே கூறியப் பாடல் தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்களால் இயற்றப்பட்டது. எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டு மலரில் இருந்து எடுத்து இங்கே தரப்படுகிறது!


இரா.பானுகுமார்,
சென்னை.

Monday, November 06, 2006

ஆசிவகம் 2

சமீபத்தில் கொளப்பாக்கம் என்னும் கிராமத்தில் (சென்னை அடுத்த போரூர் பகக்ம்) இரு தீர்த்தங்கரர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. சிலைகளை கீழே உள்ள வலைச்சுட்டியில் பார்க்கலாம்.

http://www.hinduonnet.com/2006/02/12/stories/2006021200332000.htm

தொல்பொருள் துறையினர் இதை "புத்தர் சிலைகள்" என்று தவறாக செய்தி வெளியிட்டனர். ஆனால் அவைகள் "தீர்த்தங்கரர் சிலைகள்" என்று தியோடர். பாஸ்கர் என்பவர் இந்து நாளிதழுக்கு பின்னூட்டு அனுப்பினார். கீழ் வலைச்சுட்டியைப் பார்க்கவும்.

http://www.hindu.com/2006/02/14/stories/2006021401631000.htm

தொல்பொருள் துறை தவறாக செய்தி வெளியிட்டது என்று தான் நானும் முதலில் நினைத்தேன். ஆனால் திரு. பாஸ்கரனுடைய பதிலையும் கருத்தில் கொள்ளாமல் வீம்புக்கு அது புத்தர் சிலைகள் தான் என்று தொல்பொருள் துறை மீண்டும் அறிக்கைவிட்டது. கீழே சுட்டியைப் பார்க்கவும்.

http://www.hindu.com/2006/02/18/stories/2006021805531100.htm

ஏன் இந்த வீம்பு?

செய்தித் தாளில் படங்கள் சரியாக தெரியாததால், சரி நாமே நேரில் சென்று பார்க்கலாம் என்று நண்பர் திரு. திருப்பதி சாமியுடன் கொளப்பாக்கம் சென்றேன். சிலைகள் பிறந்த மேனியுடனே தான் இருந்தன. அவைகள் நிச்சயமாக தீர்த்தங்கரர் சிலைகள் தான். பின் ஏன் இந்த முரணான செய்தி.
தொல்பொருள் துறையில் கரண்டி (:-) போட்டதில் உண்மை வெளியானது. என்னவென்றால்?

கடந்த ஆண்டு முழுவதும் கிடைத்த சிலைகள் 96% ஜைன சம்பந்தப்பட்டதாக இருந்தது. கடுப்பாகி போன தொல்பொருள் துறையில் உள்ள சில அதிகாரிகள் (பெயர் சொல்ல விரும்பவில்லை) "என்னடா இது எந்த இடத்தில் பார்த்தாலும் ஜைனமாவே இருக்குது" என்று இந்த சிலைகளை மாற்றி சொல்லிவருகிறார்கள். இனி கிடைக்க போகும் சிலைகளுக்கும் இந்த கதி வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த சிலைகள் ஆவணத்தில் புத்தர் சிலைகள் என்றே இருக்கும். "எருது குதிரை ஆனாற்போல்" ;-)

ஆசிவகம் என்ற தலைப்பை கொடுத்துவிட்டு இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்? மேலே சொன்னது ஒரு உதாரணம்தான். இன்னும் இதுபோல் ஏராளமாக உள்ளன.

ஆசிவகம் தமிழ் நாட்டில் இருந்ததுதான். அதற்கு சான்றுகள் உள்ளன. அது வேறு செய்தி. ஆனால் சமண (ஜைன) முனிவர்கள் வாழ்ந்த குகைகளை ஆசிவகத்திற்கு ஏற்றி ஏன் சொல்கிறார்கள் என்றால் "திட்டமிட்டு சமண தொடர்புடையவைகளை அழித்துவிட்டு" அவைகளை ஆசிவகமாக மாற்றி, கடைசியில் ஆசிவகம் "இந்து" மதத்தில் ஒரு பிரிவு என்று சொல்லிவிட்டால், கிடைக்கும் எல்லா சமண தொல்பொருள் சான்றுகளும் இந்து மத ஆதாரமாக போகும் ஆகையால். இது முற்றிலும் உண்மை. தமிழ் நாட்டில் சமண சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்பது நிதர்சன உண்மை. ஒன்றை புரிந்துக் கொள்ளவேண்டும். சமண சின்னங்கள் அழிந்தால் 'தமிழ் நாட்டு" தொன்மையும் சேர்ந்து அழியும்".

"கணியன் பூங்குன்றனாரின்", "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்ற பாடல் அப்பட்டமான சமணப் பாடல். சமண கருத்துக்கள் நிறைந்தப் பாடல். அதை வேண்டுமென்றே "ஆசிவகம்" சார்ந்தது என்று புனைந்துரைக்கிறார்கள். அதுபோலவே, " நாலடியார்" ஒரு சமண நூல். அதையும் சிலர் "அறிஞர்கள்" ஆசிவகம் என்கிறார்கள். திருவள்ளுவர், இளங்கோவடிகள் பிறப்பால் தமிழ்ச் சமணர்கள். அதையும் திரித்து அவர்களை இந்துவாக மாற்றிவிட்டார்கள். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அவைகளை பின்னர் பரிமாறிக் கொள்கிறேன்.



இரா.பானுகுமார்,
சென்னை.

Friday, November 03, 2006

நா. கணேசனார் அவர்கள்

யான் அகத்தியத்தில் எழுதும் முன்னரே அவருடைய எழுத்தைப் படித்திருக்கிறேன். பல பழைய நூற்களை பதிப்பித்திருக்கிறார். நல்ல படிப்பாளி! நிறைய புத்தகங்களை சேர்த்தும் வைத்திருக்கிறார். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பிறவிப் பயனே!

அகத்தியத்தில் எழுத ஆரம்பித்தபின் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மிக சுருக்கமாக எழுதுவார். "திருவள்ளுவர் சமணர்" என்ற தொடர் எழுதும்போது எங்கள் நட்பு வளர்ந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு இந்துவானவர் திருக்குறள் சமணம் சார்ந்தது என்று துணிந்து கூறுவதோடு மட்டுமல்லாமல் அந்த கருத்தில் கடைசிவரை உறுதியாக இருக்கிறார் என்றால் அது பெரிய விஷயம். யாருக்கும் அந்த மனசு வராது.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன்னுடைய "திருக்குறள் - புதிய உரை" என்ற புத்தகத்தில் (முதற்பதிப்பு) முன்னுரையில் திருவள்ளுவர் "சமணர்" என்றும் கடவுள் வாழ்த்து னிச்சயம் சமணம் என்றும் எழுதினார். சில மேடைகளிலும் பேசியுமுள்ளார். ஆனால், அவருடையக் கருத்துக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தவுடன் தன்னுடைய மற்ற பதிப்புகளில் அந்த வாக்கியங்களை சேர்க்காமல் விட்டுவிட்டார்.

ஆனால், திரு.கணேசனார் அவர்கள் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் தன்னுடைய கருத்தை மறைத்துச் சொல்லவில்லை.

எங்களுடையதை எங்களது என்று சொன்ன கணேசனாருக்கு எங்கள் சமூகம் (தமிழ் ஜைனம்) மிக கடமைப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் நிறைய அறிஞர்கள் இருக்கிறார்கள். ஞாபகம் உள்ள வரையில் மயிலை. சீனி.வேங்கடசாமி அவர்கள், பவ்விய சீவன் உ.வே.சா அவர்கள், தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள், திரு. வேணுகோபாலனார் அவர்கள், திரு. வையாபுரி அவர்கள், திரு.கா.நா. சுப்பிரமணியம் அவர்கள், புலவர். செ.இராசு அவர்கள்...... போன்றோர்களுக்கு தமிழ் சமணம் என்றும் என்றும் கடமைப்பட்டுள்ளது.



இரா.பானுகுமார்,
சென்னை.